திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சூரிய சக்தியில்
இயங்கும் எக்கோ ஃப்ரி ரிக்ஷா ஒன்றினை தயாரித்து அனைவரின் பாராட்டுக்களையும்
பெற்றுள்ளார்.
சாதனைக்கு சொந்தக்காரரின் பெயர் சிவராஜ். எம்.பி.ஏ படித்துள்ள இவருக்கு
ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம்.
இவர் கண்டுபிடித்துள்ள,
பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப் தான்
திருப்பூரின் ஹைலைட்.
பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச்
லுக்கோடு இருக்கிறது இந்த ரிக்ஷா.
சூரிய சக்தி ஆட்டோ... திருப்பூர் இளைஞரின் சாதனை
இந்தியா புக் ஆப் ரெகாட்ஸ்
புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர்
கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா
புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும்
தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.
எளிதான எகோ ஃப்ரி கேப்
'எகோ ஃப்ரீ கேப் பார்க்க ரிக்ஷாவின் தோற்றத்தில் இருக்கும். இதில் மூன்று
பேர் வரை பயணிக்கலாம் என்கிறார் சிவராஜ்.
சூரிய சக்தி, பேட்டரி, மனித சக்தி மூலம் இது இயங்குகிறது. மனித சக்தி
என்றதும் கடின உழைப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். சைக்கிளைப்
பெடல் செய்வதுபோல் எளிதாகத்தான் இருக்கும். சூரிய ஒளியில் மூன்று மணி நேரம்
சார்ஜ் செய்தால், சுமார் 150 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம். மணிக்கு
45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.
இந்த வண்டியை வடிவமைத்ததும் இதை முதல்முதலில் தமிழக முன்னாள் கவர்னர்
சுர்ஜித் சிங் பர்னாலாவின்
பேத்தியும் உதயநிதி ஸ்டாலினும்தான் டெஸ்ட் டிரைவ் செய்தார்கள்.
மூன்று வருட உழைப்பு
இந்தக் கண்டுபிடிப்பைச் செய்து முடிக்க எனக்கு மூன்று வருடம் உழைப்பு
தேவைப்பட்டது. பலமுறை வடிவமைத்தும் திருப்தி ஏற்படவில்லை. ஏதாவது ஒரு
சிக்கல் இருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த
பின்புதான் திட்டம் வெற்றி பெற்றது என்பதால், லட்சக்கணக்கில் பணம்
செலவானது. ஆனால், இப்போது சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்
என்பதால், எளிதில் வடிவமைத்துவிடுவேன்.
விலை அதிகமில்லை
இது மார்க்கெட்டுக்கு வரும்பட்சத்தில் விலை தோராயமாக ஒரு லட்சம் இருக்கும்.
ஆனால், பெட்ரோல் செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது. தினமும்
துடைத்து, சுத்தமாகவைத்து இருந்தாலே போதுமானது.
உழைப்புக்குப் பலன்
என்னுடைய மூன்று வருட உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. எங்கள்
தயாரிப்பை விளம்பரப்படுத்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் சில வண்டிகளை
மட்டும் மக்கள் சேவைக்காக டிரைவர்களை நியமித்து இயக்க இருக்கிறோம்.
இதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறையினரிடம் பேசிவருகிறேன்.
வெளிநாடுகளில் வரவேற்பு
இந்தக் கண்டுபிடிப்பை இணையத்திலும் வெளியிட்டு இருந்தேன். அதைப்
பார்த்துவிட்டு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நிறையப்
பேர் தொடர்புகொண்டார்கள்.
அரசு அங்கீகாரம் கிடைக்குமா?
பெட்ரோல் விலை உயர்வு என்பதைத் தாண்டி எரிபொருள் பயன்பாட்டால் பூமி
வெப்பமயமாதலைக் குறைப்பதில் இந்த வாகனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று
பாராட்டினார்கள். விரைவில் அரசின் அங்கீகாரம் பெற்று இந்த வாகனத்தை
விற்பனைக்கு விட இருக்கிறேன்'' என்கிறார் உற்சாகத்துடன்.
Thanks to TamiloneIndia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக