வெள்ளி, 17 அக்டோபர், 2014

ஆண்ட்ராய்ட்போனில் தவறுகள் தவிர்க்க டிப்ஸ்

மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சில பொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.


1. பாதுகாப்பினை உருவாக்குக: 


ஸ்மார்ட்போனில் நாம் அதிக அளவில் டேட்டாவினைச் சேர்த்து வைக்கிறோம். இந்த தகவல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதவையே. எனவே, இவற்றை மற்றவர்கள் எளிதில் அணுகும் சூழ்நிலையில் அமைக்கக் கூடாது. மற்றவர்கள் போனைக் கையாள்வதைத் தடுக்க, பாஸ்வேர்ட், பேட்டர் அமைப்பின் வழி பாதுகாப்பு, விரல் ரேகை பாதுகாப்பு அல்லது உங்கள் ஸ்மார்ட் போன் தரக்கூடிய எந்த வகையிலாவது, பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும். கூகுள் அக்கவுண்ட்டினை இதில் பயன்படுத்தினால், இரண்டு அடுக்கு நிலை பாதுகாப்பினை உருவாக்கி வைக்கவும்.


2. பி.ஓ.பி. (POP) அஞ்சல் முறையைத் தவிர்க்கவும்: 

பொதுவாக ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு கேள்வியை எதிர்பார்க்கலாம். ”ஏன் என் மெயில்கள் போனிலிருந்து அல்லது டெஸ்க்டாப்பிலிருந்து மறைந்து விடுகின்றன?” இதற்கான அடிப்படை காரணம், நீங்கள் உங்கள் அஞ்சல் கணக்கினை பி.ஓ.பி. வகையில் அமைப்பதுதான். இந்த வகையில், அஞ்சல்கள் எப்போதும் அதற்கான சர்வரில் தங்கி இருக்கும்படி அமைக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க தரவிறக்கம் செய்திடுகையில், சர்வரில் இருந்து மறையும்படி அமைக்கக் கூடாது. பலவகையான வழிகளில் அஞ்சல் அக்கவுண்ட்களை அமைக்கலாம். ஆனால், கூடுமானவரை பி.ஓ.பி. வகை செட் அப்பினைத் தவிர்க்கவும். 

 
8HojqHi.jpg


3. விட்ஜெட்டுகள் அதிகம் தேவையா? 


சில ஆண்ட்ராய்ட் ஹோம் ஸ்கிரீன் திரைகளில் எக்கச்சக்கமான விட்ஜெட்டுகள் எனப்படும் அப்ளிகேஷன்களைப் பார்க்கிறோம். விட்ஜெட்டுகள் என்பவை எப்போதும் தாமாகவே இயங்கி, தகவல்களைத் தந்து கொண்டிருப்பவை. எந்த அளவிலான எண்ணிக்கையில் இவை அதிகமாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு உங்கள் போனின் பேட்டரி மின் சக்தி வேகமாகத் தீர்ந்துவிடும். எனவே, உங்களுக்குத் தேவையான, அவசியம் தேவையான விட்ஜெட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அதிகமாக வேண்டாம். 



4. ஜிமெயில் தவிர்க்க வேண்டாம்: 


ஆண்ட்ராய்ட் மற்றும் ஜிமெயில் பிரித்து வைத்துப் பார்க்க இயலாதவை. இவை இரண்டும் இணைந்த செயல்பாடு மிகவும் நேர்த்தியாக இருக்கும். எனவே, நீங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கிப் பயன்படுத்துவதாக இருந்தால், கட்டாயம் ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தவும். ஜிமெயில் அக்கவுண்ட் இல்லை என்றால், பல முக்கிய பயனுள்ள விஷயங்களை இழக்க நேரிடும். கூகுள் பிளே ஸ்டோர், பேக் அப் எடுப்பது எனப் பல முக்கிய செயல்பாடுகளை, ஜிமெயில் அக்கவுண்ட் வழியாகத்தான் மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்ட் போனை செட் அப் செய்வதற்கு முன்னரே, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி, போன் செட் அப் செயல்பாட்டின் போது பயன்படுத்தவும். காலப் போக்கில் போன் பயன்பாட்டில், இதன் வசதிகளை நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள்.



5. அனுமதிகளை அளந்து தரவும்: 


அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும்போது, சிஸ்டத்திற்கு எந்த வகை அனுமதியைத் தர இருக்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உங்களுக்குக் கிடைக்கும். சிஸ்டத்திற்கான அனுமதியைக் குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும். சில அப்ளிகேஷன்கள் உங்களுடைய இடம் குறித்த தகவல்கள், மின் அஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். இவற்றைத் தர வேண்டாம். இவை இல்லாமல், இன்ஸ்டால் ஆகாது என்றால், அந்த அப்ளிகேஷனையே புறக்கணித்துவிட வேண்டும். எந்த வகை அனுமதி கொடுத்தால், நம் டேட்டா எந்த அளவில் அப்ளிகேஷன் வசப்படும் என்பதனை நன்கு அறிந்து, அதற்கேற்ப அனுமதி தரவும். 



6. தேவை இல்லாமல் புளுடூத் ஏன்?


 நீங்கள் புளுடூத் பயன்படுத்தாதவராக இருந்தால், அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், ஏன் அதன் இயக்கத்தைத் தொடர்ந்து செயல் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்? இது உங்கள் பேட்டரியின் மின் சக்தியை வேகமாக இழக்கச் செய்திடும். எனவே, போன் செட் அப் செய்திடுகையில், புளுடூத் வசதியை இயங்கா நிலையில் அமைக்கவும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும். இதே போல வை பி வசதியையும் பயன்படுத்தவும். 


7. அப்ளிகேஷன் தணிக்கை: 

உங்கள் போனில் எத்தனை அப்ளிகேஷன்களை அமைத்து இருக்கிறீர்கள் என மாதம் ஒருமுறையாவது தணிக்கை செய்திடவும். பயன்படுத்தாதவற்றை அன் இன்ஸ்டால் செய்திடவும். கேம்ஸ் விளையாடுவது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால், அவற்றில் நாளடைவில் ஆர்வம் குறைந்துவிட்டால், அன் இன்ஸ்டால் செய்து விடலாம். பயன்படுத்தாத அப்ளிகேஷன்களும், கேம்ஸ்களும், பயன்படுத்தாத நிலையிலும் பேட்டரியின் சக்தியை இழக்க வைத்திடும்.


8. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு,

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளைந்து கொடுக்கும் தன்மை தான். இதனாலேயே, புதிதாய் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள், அனைத்தையும் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அனைத்தையும் பயன்படுத்த எண்ணினால், சில முக்கிய பயன்பாடுகளை இழக்க நேரிடும்.



9. அப்டேட் குறித்து அலட்சியம் வேண்டாம்: 


பல வேளைகளில் நமக்கு சில அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அல்லது, புதிய அப்டேட் உள்ளது. தரவிறக்கம் செய்திடவா? என்ற அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் இதனால் தொல்லை ஏற்படுமோ என்று எண்ணி அனுமதி மறுப்பார்கள். சிலர், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அப்டேட் குறித்து அறிவிப்புகள் வருவதற்கு காரணம், பெரும்பாலும் அவை போனின் பாதுகாப்பு குறித்த பைல் அப்டேட் ஆகவே இருக்கும். பொதுவாக, ஆப்பிள் நிறுவனம், தான் பெரிய அளவில் மாற்றங்களைத் தருவதாக இருந்தால் மட்டுமே, இது போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்.

சில வேளைகளில், முன்பாகவே அறிவித்துவிட்டு, தானாகவே ஒரே நேரத்தில், தன் அனைத்து ஐபோன்களிலும் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன்களை அப்டேட் செய்திடும். ஆண்ட்ராய்ட் அப்படி அல்ல. சின்ன விஷயங்களுக்குமான அப்டேட் குறித்தும் அறிவிக்கும். சில அப்டேட் பைல்களை நம் உதவியின்றி போனில் அப்டேட் செய்திட முடியாது. பொதுவாக, நாம் குறிப்பிட்ட 
கால இடைவெளியில் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்ளிகேஷன் மேனேஜர் பிரிவிற்குச் சென்று, அங்கு அப்டேட் செய்ய வேண்டிய பைல்கள் உள்ளனவா என்று சோதனை செய்து, பின்னர் அப்டேட் செய்திடலாம். அல்லது பிளே ஸ்டோர் சென்றும் இதனை அறியலாம். 


ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது இப்போது உலகெங்கும் அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைப் பெற்றுள்ள ஒரு தளமாகும். எனவே, அதற்கு மாறிக் கொள்கையில், சிறிய அளவிலான தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.

குறிப்புகள்

போனுடன் வந்த சாப்ட்வேர்

மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய சாப்ட்வேர் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் சாப்ட்வேர் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கம்ப்யூட்டர்களிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் "All" என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும். 
 



குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக

மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு "Bandwidth management" என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு "Reduce data usage" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும். 
 



ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு

நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.
 



டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு

ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம். 


காட்சியை அழகுபடுத்த உங்கள் ஆண்ட்ராய்ட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.


தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை

ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது. திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும். 
 



கீ போர்ட் மேம்படுத்தல்

பெரும்பாலான ஆண்ட்ராய்ட் போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word prediction வசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 
 



லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு

ஆண்ட்ராய்ட் சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments), பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன் மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.



அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும். இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும். குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் "Show notifications" என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது. 



முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர

உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு "Manage labels" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து "Sync messages" என்பதனைத் தேர்ந்தெடுத்து, "Sync: Last 30 days" என்பதற்கு மாற்றவும். இறுதியாக, "Label notifications" என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.



திரைக் காட்சி ஸூம் செய்திட

பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம். பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும். ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப் பட்டிருக்கும்.

இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு "Force enable zoom" என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இவை அனைத்துமே, உங்களுக்கு எப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.


1 கருத்து: