வெள்ளி, 23 ஜனவரி, 2015

கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?



வட்டியில்லா கடன் காலம்
கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்

மினிமம் தொகை
மொத்த நிலுவைத் தொகையில் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதமுள்ள தொகையைக் கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம் கணக்கிடப்படும்

பணமாக எடுத்தல்
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்றக் கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 பணம் எடுத்தால் அதற்கு ரூ. 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்ட ணமாக இருக்கும். மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி விகிதம் 35 % முதல் 40% என்கிற அளவில் இருக்கும்

இஎம்ஐ வசதி
கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்திலிருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்

கடன் அளவு
நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம்

ஆஃபர்கள்
பண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினால் 5 % முதல் 10% வரை கேஷ் பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தெளிவு வேண்டும். பண்டிகை கால போனஸ் கிடைத்து அதை பில்லிங் தேதியில் கட்டிவிட முடியும் என்றால் துணிந்து வாங்கலாம். ஆனால் போனசை செலவு செய்துவிட்டு பண்டிகை ஆஃபர்களில் அள்ளினால் சிக்கல்தான்
 
கேஷ் பாயிண்ட்ஸ்
கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும். இதற்கு சில சலுகைகள் உண்டு. ரூ. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும்.
சரியாகக் கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது. எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும்

அனுமதிகளில் கவனம்
தேவை என்ன என்பதைப் பொறுத்து கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு ஓகே சொல்லவும். கிரெடிட் கார்டு வாங்கும்போது கூடவே சில சலுகை கொடுக்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லலாம்.
ஆனால் அவசியமிருந்தால் மட்டுமே உடன்படவும். ஒரு வருட மருத்துவக் காப்பீடுக்கு அனுமதி கொடுத்திருப்போம். ஆனால் அடுத்த ஆண்டும் உங்களுக்கு அறிவிக்காமலேயே பணத்தை பிடித்திருப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் பொருளாதார நிலைமை குறித்து கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள். எனவே ஆஃப்ஷன்களில் தெளிவு வேண்டும்

திரும்ப ஒப்படைப்பது
கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து நோ டியூ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்

சிபில் எச்சரிக்கை
நவீன வசதிகள் நமது வாழ்க்கைத் தரத்தை மாற்றலாம், ஆனால் அதை கையாளுவதில் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் வேண்டும். கடனைக் கட்டாமல் சிக்கல் ஏற்படுத்தினால் நமது பெயரை சிபிலில் சேர்த்து விடுவார்கள். அது பிற வகையில் நமது கடன் வாங்கும் மதிப்பைக் குறைத்து விடும். தனிநபர் கடன், வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிடும்போது சிக்கலாகிவிடும்

வருமானத்தையே செலவு செய்கிறோம்
கிரெடிட் கார்டு பயன்படுத்து பவர்கள் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்வதா அல்லது கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வதா என்பதை முடிவு செய்து கொண்டால் கிரெடிட் கார்டு நல்லதா கெட்டதா என்பது விளங்கிவிடும்

கிரெடிட் கார்டு - 10 டிப்ஸ்கள்
1.பில்லிங் காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.
2.ஆன்லைனில் பொருள்கள் வாங்கினால் விர்ச்சுவல் கீபோர்டு மூலம் பாஸ்வேர்டு கொடுப்பது பாதுகாப்பு.
3.கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும்.
4.கேஷ் ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
5.ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டு இருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என பரிமாற்றத்தை தவிர்க்கவும்.
6.கிரெடிட் கார்டு கடனை அடைக்க வெளியில் கடன் வாங்க வேண்டும் என்றால் நிதி நிர்வாகத்தில் நீங்கள் வீக்.
7.பில்லிங் தேதியை தவற விட்டால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சறுக்கலில் முடியலாம்.
8.குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாள் பணத்தைக் கட்டினாலும் அபராதக் கட்டணம், தாமதக் கட்டணம், அதற்கு வட்டி என கூடுதலாக கட்ட வேண்டும்.
9.கிரெடிட் கார்டு கடனை கட்டவில்லை எனில் தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன் வாங்குவது சிக்கலாகும்.
10.கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால் கிரெடிட்கார்டு வழங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து அதன் செயல்பாடுகளை முடக்கிவிடவும்.

கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்.

 கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்கு பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...

1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.

2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத் தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.

3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாகப் படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.

4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.

5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாகத் தோன்றினால் உடனடியாக வங்கிக்குப் புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.

6. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.

7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள். தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.

8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளைக் களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.

9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப்பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்குப் புகார் செய்யுங்கள்.

10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களைத் தவிருங்கள்.

11. மாதாந்திர பில் தொகையைச் செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.

12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதைத் தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.

13. எந்தப் பிரச்சினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரைப் பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனைப் பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத் தரக்கூடும். பிரச்சினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள்ஸ்வாகாசெய்து விடும் அபாயம் உள்ளது.

17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத் தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.

18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.

19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை  www.creditcardwatch.org என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.

வங்கி நடைமுறை குறைதீர்ப்பாளர்,
இந்திய ரிசர்வ் வங்கி,
கோட்டைச்சரிவு,
16, இராஜாஜி சாலை,
சென்னை 600001.
தொலைபேசி: 044-25395487,
இணைய முகவரி: www.bankingombudsman.rbi.org.in

கடன் அட்டை உபயோகிப்பதில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன?
* நீங்கள் பொருட்களை வாங்கப்பணமோ, காசோலையோ எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
* வாகன பழுது, மருத்துவம் போன்ற எதிர்பாராத செலவுகளுக்கு கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்.
* உணவுப்பொருட்கள், மளிகைப் பொருட்கள், பல்வேறு சேவைகளுக்கும் நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்.
கடன் அட்டையைப் பயன்படுத்தி நீங்கள் செலவழித்த தொகை பற்றிய மாதாந்திர அறிக்கை மாதம் ஒருமுறை உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதைப் பார்த்துக்கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் கடன் அட்டைச் செலவுகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
* பொதுவாக உங்களின் எல்லாவித செலவுகளையும் ஒருமுகப்படுத்தி, மொத்தமாகச் செலுத்திக்கொள்ளலாம்.
* நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு பாதுகாப்பு, பொருட்களின் உத்தரவாதம் அதிகரிப்பு போன்றவையும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கிடைக்க வாய்ப்பு உண்டு.
* குறிப்பிட்ட அளவுக்கு மேல் செலவழிப்பவர்களுக்கும், குறிப்பிட்ட வியாபார நிறுவனங்களில், சேவை மையங்களில் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டுகளுக்கும் அந்த நிறுவனங்களும், கார்டு நிறுவனமும் அவ்வப்போது பல்வேறு சலுகைகளை அளிக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக