புதன், 28 செப்டம்பர், 2016

ஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி?



ஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி?

வீடு மாறினாலோ, வேலை காரணமாக ஊர் மாறினாலோ நமது ஆவணங்களிலும் முகவரியை மாற்ற வேண்டியது அவசியம். குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

குடும்ப அட்டையில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்:
முகவரி மாறியவுடன் முதலில் மாற்ற வேண்டியது கேஸ் இணைப்பைத்தான். அதற்கு தற்போது குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தந்தை அளித்து கைப்பட ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் போதும். வீட்டு ஒப்பந்தம், கேஸ் இணைப்பின் ரசீது இவற்றின் நகல்களை இணைத்து குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

எங்கே விண்ணப்பிப்பது?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் எனில் 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். அதே மாவட்டத்தில் வேறு ஊரில் கடை மாற்றம் செய்யவேண்டுமெனில் 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். மாநிலத்திற்குள் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுகா முகவரி மாற்றம் 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

தாமதமானால் என்ன செய்ய வேண்டும்?
வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளரிடமும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்ய வேண்டும் அல்லது தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும் அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்கிற எண்ணில் தொலைபேசியிலோ, consumer@tn.gov.in, schtamilnadu@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4-ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு,

எங்கே விண்ணப்பிப்பது?
வேறு வாக்காளப் பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காக படிவம் 8 A ஐ பயன்படுத்தவேண்டும்.

மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், மண்டல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற விவரத்தை http://elections.tn.gov.in/EPIC_CENTRE_ADDRESS.pdf என்கிற இத்தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்ற: தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, இத்துடன் முந்தைய முகவரிக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் என்.ஓ.சி. (‡No objection Certificate) ) வாங்கி இணைக்க வேண்டும்.

எங்கே விண்ணப்பிப்பது?
ஓட்டுநர் உரிமத்தில் தனது பெயரையோ அல்லது தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரையோ, பிறந்த தேதியையோ, முகவரியையோ ஏதேனும் மாற்ற விரும்பினால் அதற்கான சான்றையும், ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பமும் எழுதிக் கொடுத்தால் போதும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு I / II அவர்களிடம் நேரில் கொடுக்க வேண்டும்.

கட்டணம்:
கட்டணம் 315 ரூபாய்தான்.

வங்கிக் கணக்கில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது.

எப்படி விண்ணப்பிப்பது?
கணக்கு இருக்கும் வங்கிக்குச் சென்று வங்கிக் கிளையை மாற்றம் செய்து தரக் கோரி ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பித்தால் போதும், உங்கள் வங்கிப் புத்தகத்தில் அந்தக் கிளையின் பெயரை எழுதிக் கொடுத்துவிடுவார்கள். பின்னர் அந்தப் புத்தகத்துடன் எந்த வங்கிக் கிளைக்கு மாற்ற விரும்புகிறீர்களோ அங்கு சென்று கணக்குப் புத்தகத்தைக் கொடுத்து, தேவையான ஆவணங்களையும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஒரு வாரம் முதல் 15 நாட்களுக்குள் மாற்றம் செய்து தந்துவிடுவார்கள்.

ஆதார் அட்டையில் முகவரி மாற்ற :
ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை. http://uidai.gov.in/update-your-aadhaar-data.html என்கிற இத்தளத்திற்குச் சென்று ஆன்லைன் வழியாக அப்டேட் செய்துகொள்ளலாம். தேவையான ஆவணங்களில் கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்னும் நிரந்த மையம் அமையாததால் தபாலில் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியில் அனுப்பலாம். விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: http://uidai.gov.in/images/application_form_11102012.pdf

தமிழில் விண்ணப்பம் அனுப்ப :
UIDAI Regional Office
Khanija Bhavan, No.49, 3rd Floor,
South Wing Race Course Road, Bangalore - 01080-22340862

ஆங்கிலத்தில் விண்ணப்பம் அனுப்ப:
UIDAI Regional Office,
5th 7th Floor, MTNL Building,
B D Somani Marg, Cuff Parade, Mumbai – 400 005
022 - 22186168

மேலும் விவரங்கள் பெற: 1800-300-1947, help@uidai.gov.in

பாஸ்போர்ட்டில் முகவரி மாற்ற :
எல்லா ஆவணங்களையும் மாற்றிவிட்டு இறுதியாக பாஸ்போர்ட் முகவரியை மாற்ற வேண்டும். ஏனெனில் பாஸ்போர்ட் முகவரி மாற்றத்துக்குத் தேவையான ஆவணங்கள் அதிகம்.

தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை.

எங்கே விண்ணப்பிப்பது?
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் விண்ணப்பிக்கலாம் இவற்றுக்கு ஃபார்ம் 2 - பயன்படுத்த வேண்டும். (பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சிறு திருத்தங்கள் மேற்கொள்ள, பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை).

கட்டணம்:
இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆவணங்களில் முகவரியை மாற்ற விரும்புவோர் கவனத்திற்கு
  • புதிய முகவரிக்கு ஆவணங்களை மாற்றும்போது முதலில் ஓர் ஆவணத்தில் முகவரியை மாற்றி, பின்னர் மற்ற ஆவணங்களை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும்.
  • முதலில் கேஸ் இணைப்பை மாற்றிவிட வேண்டும். பின்னர் அதை வைத்து குடும்ப அட்டையையும், குடும்ப அட்டையை வைத்து மற்ற ஆவணங்களையும் மாற்றிவிட்டு கடைசியாக பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • சில இடங்களில் நீங்கள் கொடுக்கும் ஆவணங்களுடன் கூடுதல் ஆவணம் கேட்டால் நோட்டரி பப்ளிக் வாங்கிக் கொடுக்கலாம்.

பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?



பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?

ஒருவர் தமது சொத்தை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடமிருந்து வாங்கினாலோ அல்லது வேறு ஒரு பெயருக்கு மாற்றினாலோ அதை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். இரண்டு தனி நபர்களுக்கிடையே நடக்கும் விற்பனை நடவடிக்கையை பத்திரப்பதிவு செய்வது முதல் நடவடிக்கை எனில், அதனை அரசு அங்கீகரித்து அளிப்பதே பட்டா பெயர் மாற்றம்.

பட்டா உள்ள நிலம், கட்டிடம், காலி மனை, விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் வாங்கப்படும்போது, அவற்றை விலை கொடுத்தோ, சொத்து வாரிசு உரிமைப்படியோ, பாகப்பிரிவினை பத்திரப்படியோ, உயில் ஆவணத்தின்படியோ வாங்குபவர் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? யாரை அணுகுவது? விரிவான விவரங்கள் இங்கே.

பட்டாவில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என்பதைக் காட்டுவதாகும். இதில் உரிமையாளர் பெயர், பட்டா எண், ஊரின் பெயர், மாவட்டத்தின் பெயர், புல எண் (survey number), உட்பிரிவு (sub division), நிலத்தின் பரப்பு, தீர்வை, நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா போன்ற விவரங்களை உள்ளடக்கியிருக்கும்.


எங்கே விண்ணப்பிப்பது?

சொத்தின் எல்லைக்குட்பட்ட வட்டாட்சியரிடமோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடமோ விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப்பத்தைக் கொடுத்தால் ஒப்புகைச் சீட்டு வாங்கி வைத்துக் கொள்வது அவசியம். அப்படி ஒப்புகைச் சீட்டு தராத பட்சத்தில் விண்ணப்பத்தை அஞ்சல் ஒப்புகையுடன் பதிவுத் தபாலில் அனுப்பிவிட வேண்டும்.


கட்டணம் எவ்வளவு?

பட்டா மாற்றத்திற்கு அதன் உட்பிரிவினைப் பொறுத்து 80 ரூபாயிலிருந்து 240 ரூபாய் வரைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.


எப்படி விண்ணப்பிப்பது?

பத்திரப்பதிவு செய்து, 15 நாட்களில் பட்டா மாறுதலுக்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு, நான் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒளிநகல் பத்திரத்தில் உள்ள நிலத்தைக் கிரயம் பெற்றேன். நான் கிரயம் பெற்ற நிலத்தை என் பெயரில் பட்டா மாற்றம் செய்திட/ உட்பிரிவு செய்து தனிப்பட்டா அளித்திட வேண்டுகிறேன் என்று விண்ணப்பத்தைப் பதிவஞ்சலில் ஒப்புதல் அட்டையுடன் அனுப்பிவிட வேண்டும். இத்துடன் பத்திர ஆவணங்களின் நகலை இணைக்க வேண்டும்.


எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?

சாதாரண பட்டா மாற்றத்திற்கு 15 நாட்களிலும், உட்பிரிவு செய்யவேண்டிய பட்டா மாற்றத்திற்கு 30 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும்.


பட்டாவின் அவசியம்

  • ஒருவரிடமிருந்து மற்றொருவர் நிலமோ, கட்டிடமோ விலை கொடுத்து வாங்கும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்படும். பத்திரப்பதிவுக்குப் பின் வாங்கியவர், தமது பெயருக்கு பட்டா மாறுதல் செய்துகொள்ள வேண்டும்.

  • ஏனெனில் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் நில ஆவணங்கள் இருப்பதால் பத்திரப்பதிவு நகலை வைத்து உரிய கட்டணம் செலுத்தி, தன் பெயருக்கு மாற்றித் தர விண்ணப்பிக்க வேண்டும்.

  • வட்டாட்சியரிடமிருந்து சம்பந்தப்பட்ட நில அளவையாளருக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட அவர், நிலத்தை நேரில் சென்று அளந்து, ஆவணங்களில் தேவையான மாறுதலைச் செய்து, பட்டா மாற்றம் செய்து வழங்குவார்.

  • வங்கிகளில் விவசாயக் கடன் பெற, நகைக் கடன் பெற, பத்திரப்பதிவு செய்ய, அரசின் நலத்திட்டங்களைப் பெற, இயற்கைச் சீற்றங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்போது வெள்ள அல்லது வறட்சி நிவாரணம் பெற... இப்படிப் பல அரசு சார்ந்த செயல்பாடுகளுக்கு பட்டா அவசியமாகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?



வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?



வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. அத்துடன் ஆன்லைனில் பதிவு செய்தால் அலைச்சல் மிச்சம். காத்திருக்க வேண்டிய அவசியம் மட்டுமல்ல. நேரமும் வீணாவதைத் தடுக்கலாம். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் கூட தங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவோ, அப்டேட் செய்து கொள்ளவோ செய்யலாம். தளத்துக்குச் செல்ல http://tnvelaivaaippu.gov.in/Empower

பொதுவாக 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்புப் பதிவுக்காக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்து வந்தனர். இதனால் காத்திருப்பு, காலதாமதம், நேரம், அலைச்சல் அனைத்துமே தவிர்க்க முடியாததாக இருந்தது. இதனைத் தவிர்க்க அந்தந்தப் பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அனைத்து 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கும் பள்ளியிலேயே அவர்களின் கல்வித்தகுதி ஆன்லைனில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் பதிவு செய்யப்படும். மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, ஜாதி விவரம், குடும்ப அட்டை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ் எண் ஆகிய விவரங்களை பதிவுசெய்து அப்போதே வேலைவாய்ப்பு பதிவு அட்டையும் கொடுக்கப்பட்டுவிடும்.

இதன்படி ஆன்லைனிலும் ஒரே நேரத்தில் பதிவு செய்யும்போது காலதாமதம் ஏற்படும். இதனைத் தவிர்க்க பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களிடம் முன்கூட்டியே விவரங்கள் பெற்று கணினியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், மதிப்பெண் சான்றிதழ் எண் தவிர மற்ற அனைத்து விவரங்களையும் மே 2-ஆம் தேதிக்குள் சேகரிக்க வேண்டுமெனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் அந்த எண்ணை மட்டும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

இதன்படி வெவ்வேறு நாட்களில் பதிவு செய்தாலும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே நாள் பதிவுமூப்பு அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.